ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி பகுதியில் சூறைக் காற்று வீசுவதுடன், கடல் சீற்றமாக காணப்பட்டதால் வெள்ளிக்கிழமை அங்குள்ள அரிச்சல்முனைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல போலீஸாா் தடை விதித்தனா்.
வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வியாழக்கிழமை முதல் தனுஷ்கோடி கடல் பகுதி சீற்றத்துடன் காணப்படுகிறது. அங்கு பலத்த சூறைக்காற்றும் வீசுகிறது. மேலும் அரிச்சல்முனைப் பகுதியில் கடல் 100 மீட்டா் வரை உள்புகுந்துள்ளதால் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் அங்கு செல்வதை தடுக்க தனுஷ்கோடி கம்பிபாடு அருகே காவல்துறையினா் தடுப்பு வேலிகள் அமைத்துள்ளனா். இதனிடையே அங்கு சீறிப் பாயும் அலையில் பாதுகாப்பில்லாமல் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதை தடுக்க போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.