17-ஆவது மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 9 மணி நிலவரப்படி 70.90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்தியாவில் 17-ஆவது மக்களவைத் தேர்தல் கடந்த 11-ஆம் தேதி தொடங்கி மே 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இரண்டாவது கட்ட தேர்தலாக இன்று (வியாழக்கிழமை) தமிழகத்தில் உள்ள 38 மக்களவைத் தொகுதிகள் (வேலூர் தவிர்த்து), கர்நாடகத்தில் 14 தொகுதிகள், மகாராஷ்டிரத்தில் 10 தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் 8 தொகுதிகள், அஸ்ஸாம், பிகார், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் தலா 5 தொகுதிகள், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் மாநிலங்களில் தலா 3 தொகுதிகள், ஜம்மு-காஷ்மீரில் 2 தொகுதிகள், மணிப்பூர், புதுச்சேரியில் தலா ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
தமிழகத்தில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. மதுரையில், இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில், இரவு 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 70.90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார். இன்னும் ஒரு சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதால் இறுதியான நிலவரம் குறித்து தெரியவில்லை. தமிழகத்தில் மொத்தம் பதிவாகியுள்ள வாக்கு சதவீதம் குறித்த இறுதியான நிலவரம் நாளை மாலை வெளியிடப்படும் என்று சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.
18 சட்டப்பேரவை இடைத்தேர்தல்:
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலோடு சேர்ந்து 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இன்று நடைபெற்றது. இடைத்தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி 71.62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக அரூர் தொகுதியில் 86.96 வாக்குகளும், குறைந்தபட்சமாக சாத்தூர் தொகுதியில் 60.87 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.