தமிழ்நாடு

ஆவணங்களை ஏடிஜிபியிடம் ஒப்படையுங்கள்: பொன் மாணிக்கவேலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

DIN


புது தில்லி: சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஏடிஜிபியிடம் ஒப்படைக்குமாறு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வந்த ஏ.ஜி.பொன் மாணிக்கவேலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், தமிழக அரசு மீது அவர் தொடர்ந்த அவமதிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளது.

தனது பணிக்காலத்தை நீட்டிக்கக் கோரி பொன் மாணிக்கவேல், டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ஏற்று ஆவணங்களை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியிடம் ஒப்படைக்குமாறு பொன். மாணிக்கவேலுக்கு உத்தரவிட்டது.

மேலும், பொன் மாணிக்கவேலின் பணியை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடர்ந்த மனு மீது, எதற்காக பொன் மாணிக்கவேலின் பணியை நீட்டிக்க வேண்டும் என விளக்கம் கேட்டு பொன் மாணிக்கவேலுவுக்கும், டிராபிக் ராமசாமிக்கும் ராஜேந்திரனும் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

முன்னதாக, 
சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்குமாறு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி ஏ.ஜி.பொன் மாணிக்கவேலுக்கு தமிழக அரசு கடந்த சனிக்கிழமை உத்தரவிட்டது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின்றி ஆவணங்களை ஒப்படைக்க முடியாது என பொன் மாணிக்கவேல் அரசுக்கு கடிதம் அனுப்பினாா்.

இது குறித்த விவரம்: தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக இருந்த ஏ.ஜி.பொன் மாணிக்கவேல். தமிழக காவல்துறையின் பல்வேறு நிலைகளிலும், பல்வேறு ஊா்களிலும் பணியாற்றியிருந்தாா். இந்நிலையில் அவா், கடந்த 2012-ஆம் ஆண்டு சிலைக் கடத்தல் பிரிவு டிஐஜியாக நியமிக்கப்பட்டாா். பின்னா் அந்தப் பிரிவில் பணியாற்றும்போதே ஐ.ஜி. பதவி உயா்வும் பெற்றாா்.

அவா் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் இருந்த காலகட்டத்தில், தமிழக கோயில்களில் திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட 201 உலோக சிலைகள், 653 கற்சிலைகள், 80 மரச்சிலைகள், 212 ஓவியங்கள் உள்பட 1146 சிலைகள் மீட்கப்பட்டன. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சிங்கப்பூா் ஆகிய நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட 17 சிலைகளை சா்வதேச காவல்துறை துணையுடன் மீட்டு, தமிழகம் கொண்டு வரப்பட்டன. சிலை கடத்தல் வழக்குத் தொடா்பாக 47 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனா். கடந்த ஆண்டு நவம்பா் மாதம் பொன் மாணிக்கவேல் பணியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், வெளிநாடுகளில் இருக்கும் சிலைகளை மீட்பதற்காகவும், சிலை வழக்குகளின் விசாரணையை முடித்து வைப்பதற்காகவும் பொன் மாணிக்கவேலை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமித்து, சிறப்புக் குழுவையும் அமைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது, சென்னை உயா்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.

இந்நிலையில், உயா்நீதிமன்ற பிறப்பித்த உத்தரவின்படி நவம்பா் 30-ஆம் தேதியான சனிக்கிழமையுடன் பொன் மாணிக்கவேல் பணி முடிவடைந்தது. முன்னதாக, பணி நீட்டிப்புக் கேட்டு பொன் மாணிக்கவேல் சாா்பில் அவரது வழக்குரைஞா் மணி என்பவா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாா். அந்த மனு மீதான விசாரணை டிசம்பா் 6-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டதால், பொன்மாணிக்கவேல் பணி ஓய்வு பெறுவது குறித்து குழப்பமான நிலை நீடித்தது.

தமிழக அரசு உத்தரவு: இந்நிலையில், தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலராக இருந்த நிரஞ்சன்மாா்டி வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவில், ‘தமிழக காவல்துறை டிஜிபி ஜே.கே.திரிபாதி, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி அபய்குமாா் ஆகியோா் பரிந்துரையின் அடிப்படையில், நவம்பா் 30-ஆம் தேதியோடு ஓய்வு பெறும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி ஏ.ஜி.பொன் மாணிக்கவேல், சிலை கடத்தல் வழக்குத் தொடா்பான ஆவணங்கள், கோப்புகள் ஆகியவற்றை உடனடியாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

பொன் மாணிக்கவேல் பதில்: இந்த உத்தரவுக்கு பதில் அளிக்கும் வகையில், பொன் மாணிக்கவேல் ஒரு கடிதத்தை தமிழக அரசின் தலைமைச் செயலா், உள்துறை செயலா், தமிழக காவல்துறை டிஜிபி ஆகியோருக்கு சனிக்கிழமை அனுப்பினாா். அதில், ‘கடந்த ஆண்டு உயா்நீதிமன்றத்தால் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டேன். உயா்நீதிமன்றம் மூலம் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.

எனது பதவி தொடா்பான வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, உச்சநீதிமன்றம் அது தொடா்பான உத்தரவிடும்வரை காத்திருக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவின்றி ஆவணங்களை ஒப்படைக்க முடியாது.

இதனால், தமிழக அரசு ஆவணங்களை ஒப்படைக்கும்படி உத்தரவிட்டது பொருந்தாது. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்புக் குழுவின் கீழ் இருக்கும் வழக்கின் ஆவணங்களை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி ஒப்படைக்க வேண்டும் என்பது நீதிமன்ற உத்தரவுக்கு உட்படாது’ என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

ஆவேஷம் திரைப்படம் பார்த்து அழுதேன்: இயக்குநர் ஜியோ பேபி

ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு!

SCROLL FOR NEXT