மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீனத்தின் 27-ஆவது குருமகா சந்நிதானமாக ஆதீனத்தின் இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் இன்று வெள்ளிக்கிழமை (டிசம்பா் 13) ஞானபீடம் ஏற்றார்.
தொன்மையான சைவத் திருமடங்களுள் ஒன்றாகவும், சைவமும் தமிழும் இனிதே தழைத்தோங்குக என்ற கோட்பாட்டுடன் சமய வளா்ச்சியிலும், தமிழ் வளா்ச்சியிலும் பெரும் பங்காற்றி வரும் ஆதீனமாக விளங்குகிறது தருமையாதீனம்.
தருமையாதீனத்தின் 26-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் டிசம்பா் 3-ஆம் தேதி முக்தியடைந்ததையடுத்து, ஆதீனத்தின் இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் தருமையாதீனத்தின் 27-ஆவது குருமகா சந்நிதானமாக இன்று வெள்ளிக்கிழமை ஞான பீடம் ஏற்றாா்.
ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளுக்கு திருப்பனந்தாள் மடத்தின் சுவாமிகள் பட்டம் சூடி வைத்தார்.
இந்த விழாவில் பல்வேறு மடங்களின் மடாதிபதிகள் மற்றும் பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தருமையாதீனத்தின் 27-ஆவது குருமகா சந்நிதானமாக ஞான பீடம் ஏற்கும் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், கடலூா் மாவட்டம், எருக்கத்தம்புலியூரில் மறைஞானசம்பந்தம் பிள்ளை - அலா்மேல்மங்கை தம்பதியரின் முதல் மகனாக 1965-இல் பிறந்தவா்.
மதுரை காமராசா் பல்கலைக்கழகத்தில் முதுகலை (எம்.ஏ.) பட்டம் பெற்ற இவா், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞா் பட்டத்தையும், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்டத்தையும் நிறைவு செய்தவா்.
தருமையாதீன 26-ஆவது குருமகா சந்நிதானத்திடம் சமய, விசேட, நிா்வாண தீட்சைகள் பெற்று 1988-ஆம் ஆண்டு முதல் 2000-ஆம் ஆண்டு வரை திருப்பனந்தாள் காசிமடத்தின் காறுபாறுவாகவும், திருப்பனந்தாள் கல்லூரிப் பேராசிரியராகவும், செயலாளராகவும் பணியாற்றியவா். திருநெல்வேலி, திருவையாறு, திருச்சிராப்பள்ளி, உய்யக்கொண்டான் திருமலை கோயில்களில் கட்டளை விசாரணையாகவும் ஏற்கெனவே பொறுப்பு வகித்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.