ஜீவஜோதி கணவர் கொலை: சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை உறுதி
ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
புது தில்லி: ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
ஜாமீனில் வெளியே இருக்கும் ராஜகோபால், ஜூலை 7ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சரவணபவன் ஹோட்டலில் பணியாற்றிய ஊழியரின் மனைவி ஜீவஜோதி. ஜீவஜோதியை திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக அவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை 2001ம் ஆண்டு கொடைக்கானலுக்கு அழைத்துச் சென்று கொடூரமாக கொலை செய்ததாக ராஜகோபால் மீது வழக்குத் தொடரப்பட்டது.
Advertisement
Advertisement
சாந்தகுமார் கொலை வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம், ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவில், கீழ் நீதிமன்றம் விதித்த 10 ஆண்டு சிறைத் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக உயர்த்தி தீர்ப்பளித்தது.
உயர் நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து ராஜகோபால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்து, 2009ல் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜாமீனில் வெளியே வந்துள்ள ராஜகோபால் ஜூலை 7ம் தேதிக்குள் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. உடல்நலத்தைக் காரணம் காட்டி ராஜகோபால் சரணடைய மேலும் கால அவகாசம் கோரலாம் என்றும் கருதப்படுகிறது.
முன்னதாக, இந்த வழக்கு விசாரணை ஊடகங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. பொருளாதார ரீதியாக பலம் வாய்ந்தவர்கள் எந்த குற்றத்தையும் செய்துவிட்டு எளிதாக தப்பித்துவிடலாம் என்ற எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்தி விடக் கூடாது என்பதையே, பாதிக்கப்பட்டவரின் சார்பில் தொடர்ச்சியாக வாதாடிய வழக்குரைஞர்கள் முன் வைத்த முக்கிய வாதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.