அரசியலுக்கு வந்தாலும் வருவேன் என நடிகர் விவேக் தெரிவித்தார்.
கொடைக்கானலில் தனியார் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழ்நாடு தண்ணீர் இல்லாத நாடாக மாறிக் கொண்டிருப்பது கவலையளிக்கிறது. ஏரி, குளங்களை தூர்வாரும் நடவடிக்கையில் இளைஞர்களை ஈடுபடுத்த வேண்டும். அப் பணியை துரிதப்படுத்தி, நீரை சேமித்து, சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். மழையை கொண்டு வரும் ஆற்றல் மரங்களுக்கு உண்டு. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் ஆசைப்படி, ஒரு கோடி மரம் நடும் இலக்குடன், பசுமை கலாம் அமைப்பின் மூலம் இதுவரை 30 லட்சத்து 23 ஆயிரம் மரங்கள் நடப்பட்டுள்ளன. மாணவர்கள் பள்ளிப் படிப்பு தொடங்கி கல்லூரி படிப்பு முடியும் வரை ஆண்டுக்கு ஒரு மரம் நடவேண்டும். பள்ளிகளில் அதிக அளவில் மரங்களை நடும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். நண்பர்களின் பிறந்த நாளை மரம் நட்டு கொண்டாட வேண்டும். தண்ணீர் பஞ்சத்துக்கு அதிக மரங்களை வெட்டுவதே காரணம்.
நடிகர் கமல்ஹாசன் தேர்தல் சமயத்தில் பேசியது, அவரது தனிப்பட்ட கருத்து. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார். எனக்கு அரசியல் தெரியாது, தற்போது எனக்கு அந்த எண்ணமுமில்லை. ஆனால், எதிர்காலத்தில் அரசியலுக்கு வந்தாலும் வரலாம்.
கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருள்களைக் கொண்டு வரக்கூடாது. அவை பயன்படுத்திய பிறகு மக்காத குப்பைகளாக மாறும் என்றார்.