குன்னூர் சிம்ஸ் பூங்கா பழக் கண்காட்சி நிறைவு
நீலகிரி மாவட்டத்தில் கோடைப் பருவத்தை ஒட்டி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் இரண்டு நாள்கள் நடைபெற்ற பழக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.
நீலகிரி மாவட்டத்தில் கோடைப் பருவத்தை ஒட்டி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் இரண்டு நாள்கள் நடைபெற்ற பழக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 61-ஆவது பழக் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக பூங்கா நுழைவாயிலில் பன்னிரெண்டு அடி உயரத்தில் பலாப் பழம், வாழை, எலுமிச்சை, அன்னாசி, ஆரஞ்சு, மாம்பழம் போன்ற பழங்களைப் பயன்படுத்தி அலங்கார வளைவு அமைக்கப்பட்டிருந்தது.
சுமார் ஒன்றரை டன் எடையில் ஆரஞ்சு, ஆப்பிள், அன்னாசி, மாதுளை, டிராகன் பழம் உள்ளிட்ட பழங்களைக் கொண்டு விவசாய தம்பதியுடன் கூடிய பழ வண்டி, அலங்கார மேடை, மயில், வண்ணத்துப்பூச்சி ஆகிய உருவங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. இக்கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
நீலகிரி மாவட்டத்தில் விளையும் பழ வகைகள், காய்கறிகளால் தயாரிக்கப்பட்ட ஜாம், பழரசம் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இம்மாவட்டத்தில் விளையும் காய்கறிகளான பீன்ஸ், உருளைக்கிழங்கு, கேரட், பீட்ருட், நூல்கோல், முட்டைகோஸ் போன்றவை அரங்கில் இடம் பெற்றிருந்தன.
இதில், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ஈரோடு, விழுப்புரம், கோவை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தோட்டக்கலைத் துறையினர் கலந்து கொண்டனர்.
பழக் கண்காட்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அரிதான பழங்களைக் கண்காட்சியில் இடம் பெறச் செய்தவர்கள், பல்வேறு மருத்துவ குணமிக்க பழங்களை இடம் பெறச் செய்தவர்கள், வீட்டுத் தோட்டங்கள், அரசு அலுவலகங்களில் அமைக்கபட்டிருந்த சிறந்த பூந்தோட்டங்களுக்கான பரிசுகள் என 50 மேற்பட்ட பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்பட்டன.
மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், கோட்டாட்சியர் ரஞ்சித் சிங், தோட்டக்கலை இணை இயக்குநர் சிவசுப்ரமணியம், குன்னூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் பெபிஷா, சிம்ஸ் பூங்கா மேலாளர் கோபால் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.