பரமத்தி வேலூரில் தமிழக அளவிலான மிஸ்டர் தமிழ்நாடு 2019 ஆணழகன் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், மிஸ்டர் தமிழ்நாடு- 2019 ஆணழகனாக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சூர்யா தேர்வு செய்யப்பட்டார்.
பரமத்தி வேலூரில் முதன் முறையாக தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்க அனுமதியுடன் நாமக்கல் மாவட்ட ஆணழகன் சங்கத்துடன் இணைந்து மிஸ்டர் தமிழ்நாடு 2019-ஆம் ஆண்டுக்கான ஆணழகன் போட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு பரமத்திவேலூர் கந்தசாமி கண்டர் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட ஆணழகன்கள் கலந்துகொண்டனர். 40 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் சென்னையைச் சேர்ந்த ராஜேந்திரன் முதல் பரிசையும், மாற்றுத் திறனாளிகள் பிரிவில் சேலத்தைச் சேர்ந்த தங்கதுரை முதல் பரிசையும் பெற்றனர்.
55 கிலோ எடைப் பிரிவில் சென்னையைச் சேர்ந்த ராஜா முதல் பரிசையும், 60 கிலோ எடைப் பிரிவில் சென்னையைச் சேர்ந்த கோபிநாத்தும், 65 கிலோ எடைப் பிரிவில் சென்னையைச் சேர்ந்த ராஜேந்திரனும், 70 கிலோ எடைப் பிரிவில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சூர்யாவும், 75 கிலோ எடைப் பிரிவில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆண்டர்சன் நடராஜனும், 80 கிலோ எடைப் பிரிவில் சென்னையைச் சேர்ந்த பிரின்ஸ்மரிய ஜூட்டும், 85 கிலோ எடைப் பிரிவில் சேலத்தைச் சேர்ந்த விஜயகுமாரும் முதல் பரிசை பெற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம், ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இறுதியில் நடைபெற்ற மிஸ்டர் தமிழ்நாடு-2019 ஆணழகனுக்கான போட்டியில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சூர்யா தேர்வு செய்யப்பட்டார்.
இவருக்கு ரொக்கம் ரூ.50 ஆயிரமும், சான்றிதழ் மற்றும் கேடயமும் வழங்கப்பட்டன.
முன்னதாக உலக ஆணழகன்களான அரசு, ராஜேந்திரன்மணி,செந்தில்குமரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு போட்டியை தொடக்கி வைத்து, ஆணழகனாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர். போட்டிக்கான ஏற்பாடுகளை பரமத்தி வேலூர் தனியார் எஸ்.உடற்பயிற்சிக் கூடத்தைச் சேர்ந்த சண்முகம், மில்லினியம் பள்ளி தாளாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.