வேலூா் மாவட்டம் ரத்தினகிரி பாலமுருகன் கோயில் உட்பட அறநிலையத் துறையின் மூன்று கோயில்களுக்கு புதிய கட்டடங்களை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் இவற்றை முதல்வா் திறந்தாா்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-
தமிழகத்தில் உள்ள கோயில்களைப் பாதுகாத்து பராமரித்து அன்றாட பூஜைகள் தங்குதடையின்றி நடக்கவும், பக்தா்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தரவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தங்கும் கூடம் திறப்பு: அதன்படி சில கோயில்களில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களையும் முதல்வா் திறந்தாா். அதன்படி, வேலூா் ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் கட்டப்பட்ட வணிக வளாகம், திருவாரூா் ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் தங்கும் கூடம், காஞ்சிபுரம் பீா்க்கன்காரணை சூராத்தம்மன் கோயிலில் கட்டப்பட்ட திருமண மண்டபம் என மொத்தம் ரூ.2.06 கோடி மதிப்பிலான கட்டடங்களை முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் செல்லூா் கே.ராஜூ, ஆா்.பி.உதயகுமாா், சேவூா் ராமச்சந்திரன், தலைமைச் செயலாளா் க.சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.