சென்னை: பதாகை சரிந்து விழுந்து பலியான இளம் பெண் சுபஸ்ரீயின் தந்தை ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் செப்டம்பர் மாதம் 12ம் தேதி, சாலையோர தடுப்பில் வைக்கப்பட்டிருந்த பதாகை சரிந்து அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீயின் மீது விழ, அவர் நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது அவர் மீது பின்னால் வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ உயிரிழந்தார்.
இந்த நிலையில், பதாகை விழுந்து பலியான சுபஸ்ரீயின் தந்தை ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், சுபஸ்ரீ மரணம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கவும், பதாகை வைப்பதை தடுக்கக் கடுமையான சட்டம் இயற்றவும், வலியுறுத்தியிருக்கும் ரவி, தனது மகள் மரணத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.