புதிய கட்சியை யார் தொடங்கினாலும், அவர்களால் அதிமுக வாக்கு வங்கியில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தைவானில் நிறுவப்பட உள்ள 2 திருவள்ளுவர் சிலைகளை வழியனுப்பும் நிகழ்வு, அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியது: வெளிநாடு செல்ல முடியாத நிலையில் ஸ்டாலின் உள்ளார். அதனால் அவர் முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தை விமர்சிக்கிறார். அவருக்கு அரசியல் பக்குவமில்லாததால், நல்ல விஷயங்களை பாராட்டத் தெரியவில்லை. மேலும் முதலீடுகளை ஈர்த்து வந்தால் விழா எடுப்பேன் என்று கூறியுள்ளார். விரைவில் எங்களை அழைத்து அவர் விழா எடுப்பார். அதற்கான தேதியை அவரே அறிவிப்பார். ஆனால் ஸ்டாலின் தனது கூற்றிலிருந்து பின்வாங்கக் கூடாது.
உலக அளவில் பொருளாதார மந்தநிலை உள்ளது. ஜி.எஸ்.டி. மட்டுமே அதற்கு காரணமில்லை. இதனை சீராக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஜி.எஸ்.டி. கவுன்சிலில் இதுகுறித்து வலியுறுத்தப்படும் என்றார்.
நடிகர் ரஜினிகாந்த், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் கட்சி தொடங்கவிருப்பதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு, இது ஜனநாயக நாடு. இங்கு யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். கட்சி தொடங்கும் அனைவருக்கும் வாழ்த்துகள். புதிதாக தொடங்கும் கட்சிகள் அனைத்தும் நிலைக்குமா என்பதை பார்க்க வேண்டும். அவர்களால் அதிகபட்சமாக 8 சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடியும். வருகிற சட்டப்பேரவை உள்ளிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் திமுகவால் 20-25 சதவீத வாக்குகளையும், மற்ற கட்சிகளால் 5 முதல் 8 சத வாக்குகளை மட்டுமே பெற முடியும். அதிமுக மட்டுமே 48 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெறும் என்றார்.
வ.உ.சி. பிறந்தநாளை வழக்குரைஞர் தினமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வர் கவனத்துக்கு எடுத்துச் சென்று விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.
நிகழ்வில், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் கோ.விசயராகவன், நீதிபதி வள்ளிநாயகம், விஜிபி உலகத் தமிழ்ச் சங்க நிறுவனர் வி.ஜி.சந்தோஷம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.