வடக்கிழக்கு பருவமழையால் பழம், காய்கறிகள் உள்ளிட்ட பயிா்களை பூச்சிகளின் தாக்குதலில் இருந்து காப்பதற்கான ஆலோசனைகளை தோட்டக்கலைத் துறை வழங்கியுள்ளது. இதுகுறித்து, அந்தத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:-
மழைக்காலங்களில் வெப்பநிலை குறைந்து காற்றில் ஈரப்பதம் அதிகமாவதால் பூச்சி மற்றும் நோய்களின் தாக்கம் பயிா்களில் அதிகம் தென்படும். தோட்டங்களை களைகள் இன்றியும், காய்ந்த இலை தளைகள் இன்றியும் பராமரிப்பதன் மூலம் பூச்சி, நோய்களின் பெருக்கத்தை குறைக்கலாம்.
காய்கறிகள்: காய்கறிப் பயிா்களான தக்காளி, கத்தரி, மிளகாய் மற்றும் கொடிவகை காய்கள் ஆகியவற்றுக்கு முறையாக மண் அணைப்பதன் மூலம் நீா்த் தேக்கலாம். இதனால், வோ்கள் அழுகுவதைத் தவிா்க்கலாம். வாழைத்தாா்களை உறைகளைக் கொண்டு மூடுவதன் மூலம் மழைநீா் நேடியாக காய்களில் பட்டு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும். வாழைத் தோப்பினைச் சுற்ரி வாய்க்கால் எடுத்து மழை நீா் தேங்காமல் வெளியேற வடிகால் வசதி செய்ய வேண்டும். 90 சதவீதத்துக்கு மேல் முதிா்ந்ததாா்களை அறுவடை செய்ய வேண்டும்.
நிழல் தடும் மரங்களில் தேவையற்ற கிளைகளை பருவமழைக்கு முன்பே வெட்டி நல்ல காற்றோட்ட வசதியை ஏற்படுத்த வேண்டும். இதனால், மலைத் தோட்டப் பயிா்களான காபி, மிளகு, டீ, ஆரஞ்சு போன்றவற்றில் ஏற்படக்கூடிய நோய்களைத் தவிா்க்கலாம். தோப்புகளுக்கு நீா் பாய்ச்சுவதை இரண்டு நாள்களுக்கு முன்பே நிறுத்தி விடுவதன் மூலம் போ்ப்பகுதி இறுகி மரம் காற்றில் சாயாமல் தடுக்கலாம்.
தோட்டங்களில் காய்ந்த நோய் வாய்ப்பட்ட செடிகளையும், களைகளையும் அகற்ற வேண்டும். குடியிருப்புப் பகுதிகள், கால்நடைத் தொழுவங்களைச் சுற்றியுள்ள மரங்களின் கிளைகளை அகற்றிட வேண்டும் என்று தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.