நோயின் தாக்கத்தைப் பொறுத்தே தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் கரோனா தடுப்புப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். தொடர்ந்து, தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து பதிலளித்த அவர், 'தமிழகத்தில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது. கரோனா பாதித்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, நோயின் தாக்கத்தைப் பொறுத்தே தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு செய்யப்படும்.
கரோனா தமிழகத்தில் தற்போது 2வது கட்டத்தில் இருந்தாலும், அபாயகரமான 3வது கட்டத்திற்குள் செல்லும் வாய்ப்பு இருக்கிறது. 3வது கட்டத்திற்கு கரோனா செல்லாமல் தடுக்க, அரசு தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. எனவே, அனைவரும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மேலும், மருத்துவக்குழு அறிக்கை தந்த பிறகே ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு செய்யப்படும்' என்றார்.
மேலும் பேசிய அவர், '12 நலவாரியங்களில் உள்ள 8.2 லட்சம் பேருக்கு தலா ரூ.1,000 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் பணியின்போது காவல்துறை ஊழியர்கள் உயிரிழக்க நேரிட்டால் ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். பணியின்போது உயிரிழந்த மயிலாப்பூர் அருள்காந்தி குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியுடன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்.
கரோனா அறிகுறிகள் இருப்பதை மறைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது' என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.