பொன்னேரி: பொன்னேரி அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து, 200 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
பொன்னேரி காவல் நிலைய எல்லையில் உள்ள, உதண்டிகண்டிகை கிராமத்தில் வசிப்பவர் முனிநாதன் (50). இவர், அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவர் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார்.
தற்பொழுது, இவரது மூத்த மகள், உக்ரைனில் மருத்துவ படிப்பு படித்து வருகிறார். விவசாய குடும்பத்தை சேர்ந்த முனிநாதன் தனது கிராமத்தில் நிலத்தடி நீர் உவர்ப்பு தன்மையாக மாறியதன் காரணமாக, சில வருடங்களுக்கு முன் தனது விளைநிலங்களை விற்றுள்ளார்.
நிலத்தை விற்ற, அந்த பணத்தில்,இரண்டு மகள்களுடைய திருமணத்திக்கு நகைகள் வாங்கி வைத்துள்ளார்.
இந்நிலையில், வியாழக்கிழமை திருவொற்றியூரில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வரும் மனைவியின் உறவினரைப் பார்க்க சென்றுள்ளார்.
நள்ளிரவு வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த, 200 சவரன் தங்க நகைகள், 6 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 1 லட்சத்து 50 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.
இது குறித்து தகவல் அறிந்த பொன்னேரி காவலர்கள் அங்குச் சென்று விசாரணை செய்தனர். இதையடுத்து புகாரின் பேரில், பொன்னேரி காவலர்கள், வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.