மணப்பாறையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு பொதுமக்கள் தரப்பில் புகார் வந்துள்ளது. இதனையடுத்து காவல் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் உத்தரவின்பேரில் மணப்பாறை காவல் ஆய்வாளர் கண்ணதாசன் தலைமையிலான போலீஸார் மணப்பாறை நகர் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது நகரின் மூன்று இடங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டிருந்த 12 பேரை போலீஸார் சுற்றிவளைத்த நிலையில், முருகேசன், தமிழ்செல்வன், ராஜகோபால், ஜாஹீர் உசேன், கார்த்திகேயன், கணேசன், கார்த்தி(எ) அன்பு, வேளாங்கண்ணி என 8 பேரை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, அவர்களிடமிருந்து ரூ1,00,480 ரொக்கமும், சுமார் ரூ.25,000 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மணப்பாறை போலீஸார் சோதனையின் போது தப்பி ஓடிய பழனிச்சாமி, பாஸ்கர், அபிநேஷ் மற்றும் சிராஜூதீன் ஆகிய நான்கு பேரைத் தேடி வருகின்றனர்.