தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள வீரசிங்கம்பேட்டையில் சுற்றுலாத்துறை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற பொங்கல் விழால் பங்கேற்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாட்டு வண்டியில் பயணம் செய்து கிராமத்தை வலம் வந்தனர்.
இதில், பிரான்ஸ், இங்கிலாந்து, டென்மார்க், இத்தாலி, மெக்ஸிகோ, அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்காட்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 48 பேர் கலந்து கொண்டனர்.
இவர்களுக்குத் தமிழர் பாரம்பரிய முறைப்படி கிராம மக்கள் மாலை அணிவித்து, நெற்றியில் திலகமிட்டு வரவேற்பு அளித்தனர். பின்னர், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசித்தனர்.
இதையடுத்து, கிட்டத்தட்ட 10 மாட்டு வண்டிகளில் வெளிநாட்டுப் பயணிகள் ஏறி கிராமத்தை வலம் வந்தனர். ஏறத்தாழ ஒரு கி.மீ. தொலைவுக்கு மாட்டு வண்டிகளில் வெளிநாட்டுப் பயணிகள் வலம் வந்ததை கிராம மக்களும் திரண்டு வேடிக்கை பார்த்தனர்.
மாட்டு வண்டியில் பயணம் செய்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது என்றனர் வெளிநாட்டுப் பயணிகள். இந்த விழாவில் வேளாண்மைத்துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு, மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.