தமிழ்நாடு

தனியார் பள்ளிகள் முதற்கட்டமாக 40%  கல்விக் கட்டணத்தை வசூலித்துக் கொள்ளலாம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

DIN

தனியார் பள்ளிகள் முதற்கட்டமாக 40%  கல்விக் கட்டணத்தை வருகிற ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் வசூலித்துக்கொள்ளலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கரோனா பொதுமுடக்க காலத்தில் தனியாா் பள்ளிகளில் கல்விக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்ற தமிழக அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. 

இந்த வழக்கின் இன்றைய விசாரணையில் பதிலளித்த தமிழக அரசு, தனியார் பள்ளிகள் 75% கல்விக் கட்டணத்தை 3 தவணைகளாக வசூலிக்க அனுமதி அளித்துள்ளதாக நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.  அதாவது தற்போது 25% கல்வி கட்டணம், பள்ளிகள் திறந்த பிறகு 25% மற்றும் பள்ளிகள் திறந்து 3 மாதங்களுக்கு பிறகு 25% என மூன்று தவணைகளாக வசூலிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும், தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு முடிவெடுக்கும் என்றும் கூறியுள்ளது. 

ஆனால், தற்போது பள்ளிகள் திறப்பு எப்போது? எனத் தெரியாத சூழ்நிலையில், நீதிமன்றம் இதனை ஏற்க மறுத்து, தனியார் பள்ளிகள் முதற்கட்டமாக 40%  கல்வி கட்டணத்தை வருகிற ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் வசூலித்துக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.

மேலும், இரண்டு மாதங்களுக்குப் பிறகு அடுத்த 35% கல்வி கட்டணத்தைப் பெறலாம் என்றும் அடுத்த 8 மாதங்களுக்குள் முழுவதுமாக கல்வி கட்டணத்தை வசூலித்துக் கொள்ளலாம் என கூறியுள்ளது. 

அதேபோல, முந்தைய கல்வியாண்டில் கட்டண பாக்கி இருந்தால் பெற்றோர்கள் வருகிற ஆகஸ்ட் 30-க்குள் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, தனியார் பள்ளிகள் கோரிக்கைக்கு ஏற்ப, அவர்களுக்கு இலவச பாடப்புத்தகம் வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதுமட்டுமின்றி, தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கோரக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து, வழக்கு அக்டோபர் 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மகள்!

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

SCROLL FOR NEXT