சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே கிழக்கு ராஜாபாளையத்தில் கடந்த சில நாள்களாக வெறிநாய் கடித்ததில் 17 ஆடுகள் உயிரிழந்து விட்டதால், அவைகளைக் கொன்ற வெறிநாயை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் வீரகனூர் அருகே கிழக்குராஜாபாளையம் கிராமத்தில் விவசாயிகள் ஏராளமானோர், தங்கள் விவசாயத் தோட்டங்களில் ஒவ்வொருவரும் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகின்றனர்.
ஆடுகள் வளர்ந்த நிலையில் அவைகளை, தலா ரூபாய் 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரையில் அவைகளின் எடைகளுக்கு ஏற்ப விற்பனை செய்து, அந்த வருமானத்தில் தங்கள் குடும்பச் செலவை ஈடுகட்டுகின்றனர்.
பலருக்கு ஆடுகள், முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருகின்றது. இந்நிலையில், கடந்த சில நாள்களாக வெறிநாய் ஆட்டுப்பட்டிகளில் புகுந்து ஆடுகளை கடித்துக் குதறி, அதன் ரத்தத்தை குடித்து விட்டுச் சென்று விட்டது.
அதன்பின்னர், அத்தகைய ஆடுகள் உயிரிழந்துவிட்டன. ஆடுகளை கடித்த வெறிநாயை, ஆடு வளர்ப்போரால் பிடிக்க இயலவில்லை.
அப்பகுதியைச்சேர்ந்த பிச்சைப்பிள்ளையின் 5 ஆடுகள், அன்பழகனின் 3 ஆடுகள், பெ.பெரியசாமியின் ஒரு ஆடு, மூ.பெரியசாமி, விவேகானந்தன், கோவிந்தன், மணிவேல் ஆகியோரது தலா இரண்டு ஆடுகள் வீதம் என மொத்தம் இதுவரை 17 ஆடுகள் வெறிநாய் கடித்து உயிரிழந்து விட்டன.
இதனால், கிழக்கு ராஜாபாளையத்தைச் சேர்ந்த ஆடு வளர்ப்போர், மிகுந்த அச்சத்துடன் காணப்படுகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
தற்போதைய கரோனா ஊரடங்கு காலத்தில் விவசாயத்தில் பெரியதாக லாபம் கிடைக்காத சூழலில், எங்கள் வருமானத்திற்கு அடித்தளமாக இருப்பதே நாங்கள் வளர்க்கும் ஆடுகள்தான். அவைகளின் இழப்பு எங்களின் வருமானத்திற்கு இழப்புஆகும்.
எனவே உரிய அரசு அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து வெறிநாயை பிடிக்க உடனடியாக நடவடிக்கையை வனத்துறையினர் எடுக்க வேண்டும். எங்கள் ஆடுகளை பாதுகாக்க உதவிட வேண்டும். மேலும் உயிரிழந்த ஆடுகளுக்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்க வட்டாட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இந்நிலையில் தம்மம்பட்டி வனச்சரகத்திற்குள்பட்ட வனத்துறையினர் 17 ஆடுகளை கடித்துக்கொன்ற வெறிநாயை தீவிரமாக தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.