முகப்பு
தமிழ்நாடு

கூத்தாநல்லூர் அருகே 219 பவுன் நகை, ரூ.7 லட்சம் பணம் கொள்ளை

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், அத்திக்கடையில், வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 கோடி மதிப்புள்ள 219 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.7 லட்சம் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

Updated On : 15 ஜூன் 2020, 6:02 pm IST
பகிர்:

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், அத்திக்கடையில், வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 கோடி மதிப்புள்ள 219 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.7 லட்சம் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

அத்திக்கடை, தெற்குத் தெருவில் வசிக்கும் ரசூல் பீவி (68). இவருக்கு சஹானா பீவி, ரம்லான் பேகம் என்ற இரண்டு மகள்களும், நூருல் அமீன், சர்புதீன் (38) என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். இதில், நூருல் அமீன் வெளிநாட்டில் உள்ளார். சஹானா பீவி அடுத்த தெருவில் வசிக்கிறார். கரோனா தொற்று காலத்தில் அனைவரும், தெற்குத் தெரு, ரசூல் பீவி வீட்டில்தான் இருந்துள்ளனர்.

இந்நிலையில், சனிக்கிழமை அனைவரும், அடுத்த தெருவில் உள்ள சஹானா பீவி வீட்டிற்குச் சென்றுள்ளனர். இரவு சுமார் 8 மணியளவில், கோழியைப் பூட்டி விட்டு, சர்புதீனும், அக்கா சஹானா பீவி வீட்டிற்குப் போய் விட்டார். இரவு அங்கேயே , இருந்துவிட்டு, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 10 மணியளவில், தெற்குத் தெரு வீட்டிற்கு வந்துள்ளார்.

Advertisement

இரும்புக் கேட்டின் பூட்டு திறந்து கிடந்துள்ளது. வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, இரண்டு பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த, 219 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.7 லட்சம் பணம் திருட்டுப் போயிருப்பது தெரிய வந்தது. உடன், கொரடாச்சேரி காவல் நிலையத்தில், சர்புதீன் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில், காவல்துறை ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்தனர்.

தகவல் அறிந்த, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.துரை, ஏ.டி.எஸ்.பி. அன்பழகன், திருவாரூர் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் தினேஷ்குமார், ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் கார்த்திக் மற்றும் காவல்துறை விரைந்து  வந்து பார்வையிட்டனர்.

மேலும், கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு, கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.மோப்ப நாய் ஸ்டெபி, திருடப்பட்ட இடங்களை முகர்ந்து, சிறிது தூரம் ஓடிப் போய் நின்று விட்டது. ஒரு கோடி மதிப்புள்ள தங்க நகைகள் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 

இது குறித்து, சர்புதீன் கூறியது, 
திருடப்பட்ட 219 பவுன் தங்க நகைகளும், எனது அக்கா, தங்கை, அண்ணி, எனது மனைவி உள்ளிட்ட 4 பேருக்கும் சொந்தமான நகைகள். நான் வீடு கட்டுவதால், பணத்தை வீட்டில் வைத்து இருந்தேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.