அமைப்புசாரா தொழிலாளர்கள் இனி இணையம் வழியாகவே பதிவு செய்யும் வசதியை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தமிழக அரசு தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலன்களை பாதுகாப்பதற்காக தமிழ்நாடு தொழிலாளர் துறையின் கீழ் 17 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் இயங்கி வருகின்றன.
இந்த வாரியங்களில் தொழிலாளர்கள் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்யும் பொருட்டு மாவட்ட அளவிலான தொழிலாளர் துறை உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகங்களுக்கு இதுவரை நேரடியாக செல்ல வேண்டியிருந்தது.
கரோனா வைரஸ் நோய் சமூக பரவலைத் தடுக்கும் பொருட்டும் தனி மனித இடைவெளியை பராமரிக்கும் பொருட்டும், தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே தொழிலாளர்கள் தங்களை பதிவு செய்ய மாவட்ட அலுவலகங்களுக்கு நேரடியாக செல்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. இந்த சிரமத்தைப் போக்கும் விதமாக தொழிலாளர்கள் அவர்கள் இருக்கும் இடத்திலிருந்தே இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, https://labour.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில் மேற்படி 17 வாரியங்களிலும் தங்களது பெயர்களை உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளும் வசதி தொழிலாளர் துறையால் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது என தொழிலாளர் ஆணையர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.