தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் எதிரொலியாக 3,000 ஏக்கர் பரப்பளவில் கருப்பு பன்னீர் திராட்சைப் பழம் விற்பனைக்கு வாய்ப்பின்றி கொடியிலேயே அழுகி வருகிறது.
கம்பம் பள்ளத்தாக்கில் 5,000 ஏக்கர் பரப்பளவில் திராட்சை சாகுபடி நடைபெறுகிறது. இதில், தற்போது 3,000 ஏக்கரில் திராட்சைப் பழங்கள் அறுவடைக்குத் தயார் நிலையில் உள்ளது. இங்கு விளையும் கருப்பு பன்னீர் திராட்சை கேரளம், மதுரை, திருச்சி, சென்னை ஆகிய பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படும்.
கடந்த மார்ச் 20-ம் தேதிக்கு முன்பு வரை விவசாயிகளிடமிருந்து கிலோ ரூ.50 வரை கொள்முதல் செய்யப்பட்டு வந்த திராட்சை, தற்போது கரோனா தடுப்பு நடவடிக்கைகள் எதிரொலியாக சரக்கு வாகனப் போக்குவரத்து மற்றும் விற்பனைக்கு வாய்ப்பின்றி, வியாபாரிகள் கொள்முதல் செய்ய முன்வராததால் அறுவடை செய்யப்படாமல், கொடியிலேயே அழுகி வருகிறது. இதனால், ஏக்கர் ஒன்றுக்கு ரூ.2 லட்சம் வரை உற்பத்தி செலவு செய்துள்ள விவசாயிகள் கடும் நஷ்டத்தைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நஷ்டத்தைத் தவிர்க்க, ராயப்பன்பட்டியில் உள்ள தனியார் ஒயின் உற்பத்தி ஆலை மூலம் குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்து திராட்சை கொள்முதல் செய்யவும், மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளுக்குச் சரக்கு வாகனங்கள் மூலம் திராட்சைப் பழங்களை கொண்டுச்சென்று விற்பனை செய்யவும் மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் உத்தரவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.