வேளாண் மசோதாக்களை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி, சங்கிலியால் கைகளைப் பிணைத்துக் கொண்டு விவசாயிகள் நாகை அவுரித்திடலில் புதன்கிழமை நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத் திருத்த மசோதாக்களால், பன்னாட்டு நிறுவனங்களின் பிடியில் விவசாயிகள் சிக்கும் நிலை ஏற்படும் என்பதைக் காட்சிப்படுத்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், வேளாண் திருத்தச் சட்ட மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயச் சங்கங்களின் கூட்டு இயக்க மாநிலத் தலைவர் காவிரி வி. தனபாலன் தலைமை வகித்தார். காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தலைவர் மு.சேரன் மற்றும் விவசாயச் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.