அரூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் அரசுப் பள்ளி ஆசிரியர் அசோகன் (58) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். காவல்துறையைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம் மகன் அசோகன் (58). இவர், கிருஷ்ணகிரி மாவட்டம், பாவக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார். இந்த நிலையில், பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள அ.பள்ளிப்பட்டியில் ஆசிரியர் அசோகன் புதியதாக வீடு கட்டி வந்தாராம். வீடு கட்டுமான பணிகளைப் பார்த்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் இருசக்கர வண்டியில் அரூர்-ஊத்தங்கரை தேசிய நெடுஞ்சாலையில், அனுமன்தீர்த்தம் நோக்கிச் சென்றுள்ளார். அப்போது, சோரியம்பட்டி எனுமிடத்தில், அந்த வழியாக எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் ஆசிரியர் அசோகன் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், அசோகன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இது குறித்து அசோகனின் தம்பி சிவாஜி அளித்த புகாரின் பேரில் அரூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.
காவல் துறையைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்
சோரியம்பட்டியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவத்தில், ஆசிரியர் அசோகன் வேகமாக இருசக்கர வண்டியை ஓட்டிச் சென்று, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் அவர் உயிரிழந்ததாக, காவல் துறையினர் வழக்குப் பதிந்துள்ளனராம். அதாவது, ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தபோது ஒரு தகவலையும், பிறகு திங்கள்கிழமை வழக்கில் மாற்றம் செய்து, தவறான தகவல்களை வழக்கில் பதிவு செய்திருப்பதாகப் புகார் தெரிவித்து, காவல்துறையைக் கண்டித்து ஆசிரியர் அசோகனின் உறவினர்கள் அரூர் டி.எஸ்.பி அலுவலகம் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, வழக்கில் சரியான தகவல் பதிவு செய்யப்படும் என காவல் துறையினர் அளித்த உறுதியின் பேரில், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர். இதனால், அரூர்-தருமபுரி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.