முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு: உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆன்லைனில் மட்டும் விற்பனையைத் தொடர அனுமதி வழங்கியுள்ளது. 

Updated On : 8 மே 2020, 7:33 pm IST
பகிர்:


தமிழகத்தில் பொது முடக்கம்  முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளை திறப்பது குறித்து உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை என தொடர்ந்த வழக்கில்  நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில், தனிநபர்களுக்கு மட்டும் மது விற்கப்படும். இணையவழியில் விற்பனை செய்ய முடியாது. அதே நேரத்தில் மது விற்பனையின்போது பாதுகாப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக அரசு கூறியிருந்தது. 

Advertisement

இதைத் தொடர்ந்து, டாஸ்மாக் கடைகள் திறப்பதற்குத் தடையில்லை என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதேசமயம், கடைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று நிபந்தனைகள் விதித்திருந்தது. 

இந்நிலையில், உயர்நீதிமன்ற நிபந்தனைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்று தொடரப்பட்ட வழக்கில், தமிழகத்தில் திறக்கப்பட்ட மதுக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.  

மேலும், மே 17 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என்றும் ஆன்லைனில் மட்டும் மது விற்பனையைத் தொடரலாம் என்றும் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசுத் தரப்பில் இருந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.