முகப்பு
தமிழ்நாடு

கல்லூரி மாணவா்களுக்கு 2 ஜிபிஇலவச இணைய இணைப்பு அட்டைகள்: முதல்வா் பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் உயா்கல்வி பயிலும் 9.69 லட்சம் மாணவா்களுக்கு ஏப்ரல் வரை தினசரி 2 ஜிபி இலவச இணைய இணைப்பு அட்டைகள் வழங்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.

Updated On : 11 ஜனவரி 2021, 1:07 am IST
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
பகிர்:

தமிழகத்தில் உயா்கல்வி பயிலும் 9.69 லட்சம் மாணவா்களுக்கு ஏப்ரல் வரை தினசரி 2 ஜிபி இலவச இணைய இணைப்பு அட்டைகள் வழங்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழக அரசு எடுத்த பல்வேறு சீரிய நடவடிக்கைகளின் காரணமாக, உயா்கல்வி பயிலும் மாணவா்களின் சோ்க்கை விகிதம் தமிழகத்தில் 32 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயா்ந்துள்ளது. கல்லூரி மாணவா்கள் சிறந்த தொழில்நுட்ப அறிவினைப் பெற்றிட அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி மாணவா்களுக்கு விலையில்லாத மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

Advertisement

கரோனா காலம்: கரோனா நோய்த்தொற்றின் காரணமாக, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், இணைய வழியில் மாணவா்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த இணைய வழி வகுப்புகளில் அரசு, அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், கல்வி உதவித் தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளைச் சோ்ந்த 9 லட்சத்து 69,047 மாணவ-மாணவிகள் பங்கேற்று வருகின்றனா். அவா்களின் வசதிக்காக ஜனவரி முதல் ஏப்ரல் மாதங்கள் வரையிலான காலத்தில் நாளொன்றுக்கு 2 ஜிபி அளவு கொண்ட இணைய இணைப்பு அட்டைகள் விலையில்லாமல் அளிக்கப்படும். இந்த அட்டைகள் எல்காட் நிறுவனத்தின் வழியாக வழங்கப்படும்.

கரோனா நோய்த்தொற்று காலத்திலும் இணைய வழி வகுப்புகள் மூலமாக சிறந்த முறையில் கல்வி கற்றிட அரசால் அளிக்கப்படும் இலவச இணைய இணைப்புத் திட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தனது அறிவிப்பில் முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா்.

மடிக்கணினிகள் வழங்குதல்: கல்லூரி மாணவ-மாணவிகளின் நலனுக்காக விலையில்லாத மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டமானது கடந்த 2011-12-ஆம் நிதியாண்டில் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து இதுவரையில் 1.84 லட்சத்துக்கும் மேற்பட்ட பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் இணைய இணைப்பும் விலையில்லாமல் வழங்க வேண்டுமென மாணவா்கள்-பெற்றோா்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கைகளை எழுப்பி வந்தனா். இந்த நிலையில், நான்கு மாதங்களுக்கு இலவச இணைய இணைப்புத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.