முதல்வர் விஜய்க்கு முழு ஆதரவு; நெஞ்சில் குத்தியவர்கள் வாழ்க: வைகோ பேட்டி
திமுகவும் அதிமுகவும் ரகசியமாகச் செயல்பட்டது மிகப்பெரிய அரசியல் மோசடி என்று வைகோ கூறியது தொடர்பாக...
சென்னை: திமுகவும் அதிமுகவும் ரகசியமாகச் செயல்பட்டது மிகப்பெரிய அரசியல் மோசடி என்றும், ஊழலற்ற ஆட்சியைத் தரும் முதல்வர் விஜய்க்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்கப்படும் என்றும், வரவிருக்கும் 7 தொகுதி இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது என்று அக்கட்சி பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து வியாழக்கிழமை நெல்லையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுடன் பேசினார்.
அப்போது, "ஸ்டெர்லைட் ஆலையை வேறு வடிவத்தில் கொண்டு வர முயற்சி நடக்கிறது. இதை எதிர்த்துத் தூத்துக்குடியில் மாபெரும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் போராட்டம் நடத்தப்படும். இதில் தோழமைக் கட்சிகள் பங்கேற்க உள்ளன. இதற்காக ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் போலீசாரைக் கொண்டு 15 நாள்கள் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் 2000 பக்க அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். ஓட்டு அரசியலை எதிர்பார்க்காமல் எங்கள் கட்சித் தோழர்கள் தொடர்ந்து கருவேல மரங்களை அகற்றி வருகின்றனர். தாமிரவருணியைப் பாதுகாக்கவும், போதைப்பொருளுக்கு எதிராகவும் 1500 கிலோமீட்டர் தூரம் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டேன்.
Advertisement
Advertisement
பெரிய அரசியல் மோசடி
கடந்த காலத்தில் எங்களை உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட திமுக கடுமையாக நிர்ப்பந்தித்தது. குதிரை பேரம் என்ற வார்த்தையைத் தொடங்கி வைத்ததே திமுகதான். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைப்பதற்காக, திமுக வெளியிலிருந்து ஆதரவு தர முடிவு செய்ததாகப் பேராசிரியர் காதர் மொய்தீன் ஒப்புக்கொண்டார். இதைவிட ஒரு பெரிய அரசியல் மோசடி இருக்க முடியாது. கூட்டணியில் இருந்துகொண்டே எங்களுக்கு எதிராகச் செயல்பட்டார்கள். கட்சியை விட்டு விலகியவர்கள் என் முதுகில் குத்தவில்லை, நேரடியாக நெஞ்சில் குத்திவிட்டார்கள். இருந்தாலும் அவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க. சென்றவர்களை வசைபாடுவது என் வழக்கமல்ல. விலகிய பல நிர்வாகிகள் மீண்டும் என்னிடம் வந்து சந்தித்தனர்.
கமிஷன் கலாசாரம் ஒழிப்பு
தமிழக வெற்றி கழகத்தை திராவிட இயக்கத்தின் ஓர் அங்கமாகவே பார்க்கிறேன். முதல்வர் விஜய் லஞ்சமில்லாத, சிறப்பான ஓர் ஆட்சியை வழங்கி வருகிறார். கமிஷன் கலாசாரத்தை அவர் முற்றிலுமாக ஒழித்துவிட்டார். மதச்சார்பின்மை, சமூக நீதி போன்ற கொள்கைகளில் அவர் உறுதியாக இருப்பதால், அடுத்த 5 ஆண்டுகளுக்கும் விஜய்யின் ஆட்சிதான் நடைபெறும். மீண்டும் அவரே முதல்வர் ஆவார். இளம் தலைமுறையினரை ஈர்த்து அவர் ஒரு புதிய அமைதியான ஜனநாயகப் புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.
இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது
தமிழகத்தில் வரவிருக்கும் 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மதிமுக நேரடியாகப் போட்டியிடாது. அதேநேரம், வருங்காலத் தேர்தல்களில் தீப்பெட்டி அல்லது பம்பரம் போன்ற சுயேச்சைச் சின்னங்களில் போட்டியிடவும் நாங்கள் தயாராக உள்ளோம்.
முதல்வர் விஜய் பங்கேற்கிறார்
முன்பு பொடா சட்டக் கொடுமையிலிருந்து பத்திரிகையாளர்களைப் பாதுகாத்தது நாங்கள்தான். வருகிற ஆகஸ்ட் 4 ஆம் தேதி தில்லியில் எனது நாடாளுமன்ற உரைகள் அடங்கிய ஆங்கிலப் புத்தக வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. அதில் முதல்வர் விஜய் பங்கேற்கிறார். மேலும், செப்டம்பர் 15 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அண்ணா பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்," என்றார்.
Full support for Chief Minister Vijay; long live those who stabbed me in the back says Vaiko....
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.