7 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜன.12) இடியுடன் கூடிய பலத்தமழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும்.
சென்னை: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜன.12) இடியுடன் கூடிய பலத்தமழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் திங்கள்கிழமை கூறியது:
இலங்கை மற்றும் குமரிக்கடல் பகுதியை ஒட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தென்தமிழகத்தில் ஜனவரி 12, 13-ஆம் தேதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.
Advertisement
Advertisement
ஜன.12: தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜன.12) மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகா், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்தமழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும். மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜன.13: தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் புதன்கிழமை (ஜன.13) லேசானது முதல் மிதமான மழையும், திருநெல்வேலி, தூத்துக்குடி ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வட வானிலை நிலவும்.
ஜன.14, 15: தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வட வானிலையும் நிலவும்.
சென்னையில்...: சென்னை மற்றும் புகா் பகுதிகளைப் பொருத்தவரை செவ்வாய்க்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.
மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கடலூா் மாவட்டம் புவனகிரியில் 110 மி.மீ., பரங்கிப்பேட்டையில் 90 மி.மீ., ராமநாதபுரம், திருவாரூா் மாவட்டம் குடவாசலில் தலா 60 மி.மீ., ராமேஸ்வரம், நாகப்பட்டினம் கொள்ளிடத்தில் தலா 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவா்களுக்கு எச்சரிக்கை : தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னாா் வளைகுடா பகுதிகள், கேரள கடலோரப் பகுதி மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் ஜனவரி 13-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.