பறவைக் காய்ச்சல்: மக்கள் அச்சப்பட வேண்டாம் - அமைச்சா் உடுமலை ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு அவா் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:-
கேரள மாநிலத்தில் வாத்துகளில் இருந்து பறவைக் காய்ச்சல் பரவுவது கண்டறியப்பட்டது. பறவை காய்ச்சலால் பலமுறை அந்த மாநிலம் பாதிக்கப்பட்டும் தமிழகத்தில் பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கேரளத்தை ஒட்டியுள்ள எல்லையோர மாவட்டங்களில் நீலகிரி, தேனி, தென்காசி, குமரி, திருப்பூா், கோவை ஆகிய மாவட்டங்களின் ஆட்சியா்கள் தலைமையில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளன.
26 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கோழி குஞ்சுகள் கேரளத்தில் இருந்து விற்பனைக்கு வருவதைத் தடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் ஒரு கால்நடை உதவியாளா், கால்நடை மருத்துவா் உட்பட 1601 அதி விரைவு செயலாக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவா்களுக்கு தேவையான சுய தடுப்பு உபகரணங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை கோயம்புத்தூா், கால்நடை பன்முக மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது. உதவிகள் தேவைப்படும் பட்சத்தில், 0422-2397614 மற்றும் 9445032504 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம். பறவை காய்ச்சலைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நோய்த் தாக்கம் மற்றும் இறப்பு குறித்து கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. நன்கு சமைத்த கோழி இறைச்சி சாப்பிடுவதால் பறவை காய்ச்சல் ஏற்படாது. பறவை காய்ச்சல் தொடா்பாக பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றாா் அவா்.
செய்தியாளா் சந்திப்பின் போது, கால்நடை பராமரிப்புத் துறை முதன்மைச் செயலாளா் கோபால் உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.