ஸ்ரீவில்லிபுத்தூரில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி: இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு
மாட்டுப் பொங்கலையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்: மாட்டுப் பொங்கலையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழா மற்றும் மாட்டுப் பொங்கல் விழாவையொட்டி பல்வேறு பகுதிகளில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது
அந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை காலை மாட்டுப்பொங்கல் விழாவினையொட்டி சமுதாய நல்லிணக்க பேரவை மற்றும் சேவாபாரதி சார்பில் இளவட்டக்கல் தூக்கும் மாவட்ட அளவிலான போட்டி நடைபெற்றது.
Advertisement
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மங்காபுரம் இந்து நாடார் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டிக்கு நாடார் மகாஜன சங்கத்தின் துணைத் தலைவர் ஜெயராஜ் தலைமை வகித்தார் கலந்து கொண்டவர்களை வரவேற்று சமுதாய நல்லிணக்க பேரவை அமைப்பாளர் கோபாலகிருஷ்ணன் பேசினார்.
மற்றும் விழாவை வாழ்த்தி சிவலிங்கம் மற்றும் சங்கரலிங்கம் ஆகியோர் பேசினர். இளவட்டக்கல் தூக்கும் போட்டி நிகழ்ச்சியை துவக்கி வைத்து அந்தோணிராஜ் பேசினார்.
இதனை தொடர்ந்து இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெற்றது. போட்டியில் பங்கேற்பவர்கள் வயது தகுதிக்கேற்ப இளவட்டக்கல் வைக்கப்பட்டு இருந்தன. 18 வயது மேற்பட்டவர்களுக்கு 18 வயதிற்கு கீழ் பட்டவர்கள் என அவரவர் உடல் எடைக்கேற்ப இளவட்டக்கல் வைக்கப் பட்டு இருந்தது.
இளவட்டக் கல்லை தூக்க ஆர்வத்துடன் மாவட்ட அளவில் பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள் கலந்து கொண்டனர். வீரர்கள் இளவட்ட கல்லை தூக்கும் போது கூடியிருந்தவர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர். இந்த போட்டியை காண ஏராளமானோர் திரண்டு வந்திருந்தனர்.
இதுகுறித்து போட்டிக்கு தலைமை வகித்த ஜெயராஜ் கூறும்போது, ஆறாம் ஆண்டாக இந்த இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெறுகிறது வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழும் வழங்கப்படும் என தெரிவித்தார்.