நாமக்கல்: நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் மாவட்ட ஆட்சியர் கா. மெகராஜ், தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்
நாட்டின் 72-வது குடியரசு நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
அதன்படி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடியரசு நாள் விழா நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் கா. மெகராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்ட ஆட்சியர் குடியரசு தின விழாவை சிறப்பிக்கும் வகையில் வண்ண வண்ண பலூன்களை வானில் பறக்க விட்டார். மேலும் காவல்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக அப்பழுக்கற்ற வகையில் பணிபுரிந்த காவல்துறையை சேர்ந்த 43 நபர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்களையும்,152 காவல் துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழையும் ஆட்சியர் வழங்கினார்.
கரோனா நோய் தொற்று காரணமாக இந்த ஆண்டு குடியரசு நாள் விழா நிகழ்ச்சியில் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் யாரும் பங்கேற்க அனுமதி இல்லை. கலை நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை.
இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சி. சக்தி கணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர்கள் மு. கோட்டை குமார், ப. மணிராஜ் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், நகராட்சி அலுவலகம், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடியரசு நாளையொட்டி தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டன.