நீட் தேர்வு பாதிப்புகளை கண்டறிய அமைப்பட்ட குழுவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் தொடரப்பட்ட வழக்குகளில் மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு பாதிப்புகளை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி பாஜக பொதுசெயலாளர் கரு. நாகராஜன் சென்னை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு யூகத்தின் அடிப்படையில், அரசியல் நோக்கதுடன் தொடரப்பட்டுள்ளதால் பாஜக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கில் தங்களை இடையீட்டு மனுதாரர்களாக இணைக்க கோரி மாணவர்கள், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானார்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் வில்சன், பாஜகவின் வழக்கு விளம்பரம் மற்றும் அரசியல் நோக்கத்துக்காக தொடரப்பட்டுள்ளது. இதில் பொதுநலன் எதுவும் இல்லை என வாதிட்டார். அப்போது தமிழக அரசுத் தரப்பில், இந்த வழக்கில் வாதாட தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அதே நேரம் மனு தொடர்பாக மத்திய அரசு தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு தொடர்பாக மத்திய அரசு வரும் ஜூலை 8-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி, மாணவர்கள், அரசியல் கட்சியினர் ஆகியோரிடம் தனித்தனியாக வாதங்களை பெற வேண்டி இருப்பதால் காரணமாகவும் விசாரணையை வரும் ஜூலை 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.