திருச்சி: திருச்சி மரக்கடையில் எம்ஜிஆர் சிலை உடைப்பு குறித்து கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மரக்கடை பகுதியில் 1987-ம் ஆண்டு, திருச்சி மாநகர எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில், மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் உருவச்சிலை நிறுவப்பட்டது. பின்னர் 1995-ஆம் ஆண்டு அப்போதைய அமைச்சர்கள் ஆர்.எம். வீரப்பன், நல்லுசாமி ஆகியோர் எம்ஜிஆர் சிலையை மீண்டு புதுப்பித்து கல்வெட்டு திறந்து வைத்தனர்.
தொடர்ந்து அந்த இடங்களில் பல்வேறு பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது. இந்த நிலையில் எம்.ஜி.ஆரின் சிலை இன்று காலை மர்மநபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன் தலைமையில் அங்கு திரண்ட அதிமுகவினர், சிலையை உடைத்த மர்ம நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர் திருச்சி காந்தி சந்தை காவல்நிலையத்தில் அதிமுக சார்பில் மாநகர் மாவட்ட செயலர் வெல்லமண்டி நடராஜன் புகார் கொடுத்தார். இதுகுறித்து காவல்துறையினர் கூறும்போது மரக்கடை பகுதியில் ஐந்திற்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே, சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு சிலையை உடைத்த மர்மநபர்களை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனால் இன்று காலை 11 மணியளவில் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.