சென்னையில் நாளை 1,600 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், கரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் கரோனா தடுப்பூசிகள் விலையில்லாமல் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. முதல்வரின் உத்தரவின்படி, மாநிலம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
மேலும், நவம்பர் மாத இறுதிக்குள் 100 சதவீதம் முதல் தவணை செலுத்திய மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும் என்ற அடிப்படையில் வாரத்திற்கு இரண்டு மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளை (21.11.2021) 200 வார்டுகளிலும் 1600 தீவிர தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
இதையும் படிக்க- 15-வது ஐபிஎல் சீசன் இந்தியாவில்தான்: ஜெய் ஷா உறுதி
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும். எனவே, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நாட்களை கடந்துள்ள நபர்கள் இந்த தடுப்பூசி முகாமினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைந்துள்ள இடங்களை பொதுமக்கள்
https://chennaicorporation.gov.in/gcc/covid-details/mega_vac_det.jsp என்ற மாநகராட்சியின் இணையதள இணைப்பின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம்.
எனவே, கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்களும், இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்களும் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்களில் பங்குபெற்று கரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.