உத்தரமேரூர் அருகே 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூத்த தேவி சிலை கண்டுபிடிப்பு
1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் கால மூத்ததேவி சிலை ஒன்றை உத்தரமேரூர் வரலாற்று ஆய்வு மைய்யத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகேயுள்ள உள்ளம்பாக்கம் இருளர் குடியிருப்பு பகுதியில் செவ்வாய்க்கிழமை 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் கால மூத்ததேவி சிலை ஒன்றை உத்தரமேரூர் வரலாற்று ஆய்வு மைய்யத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே வயலூர் கூட்டுச் சாலை பகுதியில் உள்ளது உள்ளம்பாக்கம் கிராமம். இக்கிராமத்தின் இருளர் குடியிருப்பு பகுதியில் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் கால மூதேவி எனப்படும் ஜேஷ்டா தேவி சிலை ஒன்றை உத்தரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த ஆய்வு மையத்தின் தலைவர் கொற்றவை ஆதன் கூறியது..
Advertisement
Advertisement
எங்களது கள ஆய்வில் கிடைத்த இச்சிலையானது ஒன்றரை அடி உயரமே வெளியில் தெரியும் வகையில் இருக்கிறது. எஞ்சிய பகுதி பூமிக்கடியில் புதைந்த நிலையில் காணப்படுகிறது. இது 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் காலத்தை சேர்ந்த ஜேஷ்டாதேவி சிலையாகும். இச்சிலையின் வலப்பக்கத்தில் மாட்டுத்தலை போன்ற வடிவில் அவரது மகன் மாந்தனும், இடப்பக்கம் மகள் மாந்தியும் காணப்படுகின்றனர்.
தலைக்கு மேலே காக்கை சின்னம் உள்ளது. இவர் குறித்த தகவல் சங்க இலக்கியங்களிலும், திருவள்ளுவர், அவ்வையார் போன்ற பெரும்புலவர்களாலும் குறிப்பிடப்பட்டுள்ளார். நந்தி வர்ம பல்லவனின் குலதெய்வமாகவும் இருந்துள்ளார். இத்தெய்வம் வளமையின் அடையாளமாகவும் இருந்திருக்கிறது. இதை அப்பகுதி மக்கள் எல்லைக்காத்தாள் என்கிறார்கள்.
இச்சிலையின் கழுத்தில் கரண்ட மகுடத்துடனும், கழுத்தில் அணிகலன்களோடும், தோள்பட்டையில் வளையல்களோடும்,கைகளில் காப்பும் காணப்படுகிறது. மூத்ததேவி என்பது மருவி மூதேவி ஆக வழக்கில் வந்து வழிபாடு இல்லாமல் போயிருக்கிறது. பழமையான இச்சிலை குறித்து தொல்லியல் துறையினர் உரிய கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும் என்பதே வரலாற்று ஆய்வாளர்களின் எண்ணமாக உள்ளது எனவும் கொற்றவை ஆதன் தெரிவித்தார்.