துறையூர்: துறையூர் காவல் நிலையத்தில் அஞ்சலக பெண் ஊழியர் ஒருவருக்கு எதிராக துறை ரீதியாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் நம்பிக்கை மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
திருச்சி மாவட்டம், துறையூர் மேற்கு உள்கோட்ட அஞ்சல் துறை ஆளுகைக்குள்பட்ட சங்கம்பட்டி கிளை அலுவலராக வைரிசெட்டிப்பாளையம் சி. யசோதா பணி செய்தபோது சங்கம்பட்டி மு. சரவணன் ரூ. 2,00,000 வைப்பீடு செய்தார். அந்தத் தொகையை வாடிக்கையாளர் சரவணனின் பெயரில் அஞ்சலகத்தில் செலுத்தி முறையாக வரவு வைக்காமல் பணத்தை கையாடல் செய்ததுடன் போலி கணக்குப் புத்தகத்தை வாடிக்கையாளரிடம் வழங்கியது துறை ரீதியான தணிக்கையின் போது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து யசோதா மீது துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு, அவர் வாடிக்கையாளர் பணத்தை கையாடல் செய்தது உறுதியான நிலையில், அவர் கையாடல் செய்த பணத்தை அவரிடமிருந்து திரும்பப் பெற்றதுடன் யசோதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் துறையூர் மேற்கு உள்கோட்ட அஞ்சலக ஆய்வாளர் அமர்நாத் துறையூர் போலீஸில் சனிக்கிழமை (மார்ச் 26) யசோதா மீது புகார் செய்தார். குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் கலைசெல்வன் ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய குற்றங்களுக்காக யசோதா மீது வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
கடந்த 6 மாத காலமாக யசோதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் மீது போலீஸில் புகார் செய்திருப்பது அஞ்சலக பணியாளர்கள் மத்தியில் அதிர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.