சென்னை: இந்தியாவில் சென்னை உள்ளிட்ட இரண்டு தொழிற்சாலைகளிலும் கார் உற்பத்தியை நிறுத்துவது என முடிவு செய்த ஃபோர்டு நிறுவனம் மின்சார வாகனத் தயாரிப்பை தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில், அந்த முடிவும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
ஃபோர்டு தொழிற்சாலைகளில் மின்சார வாகனங்களைத் தயாரிக்கும் முடிவை கைவிட்டிருப்பதாக அறிவித்திருக்கும் ஃபோர்டு இந்தியா தனியார் நிறுவனம், ஊழியர்களுடன் நிவாரணத் தொகை குறித்த பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க அழைப்பு விடுத்துள்ளது.
இதையும் படிக்க.. டிஎன்பிஎஸ்சி தேர்வில் ஸ்மார்ட் வாட்ச் அணிய தடை
இது தொடர்பாக ஃபோர்டு இந்தியா சங்கம் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்குத் தெரிவித்திருப்பதாவது, ஃபோர்டு நிர்வாகம், அதன் தொழிலாளர்களிடம், மின்சார வாகனங்கள் தயாரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்துவிட்டது. ஃபோர்டு தொழிற்சாலைகளை மூடுவதால், அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவது தொடர்பாக ஊழியர்கள் சங்கத்தை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மற்றும் சென்னையில் உள்ள இரண்டு ஃபோர் தொழிற்சாலைகளிலும் மின்சார வாகனங்கள் தயாரிக்கும் பணியை தொடங்குவது என்று ஃபோர்டு நிறுவனம் திட்டமிட்டதைத் தொடர்ந்து, நிவாரணத் தொகை குறித்து ஊழியர்கள் சங்கத்துடன் நடந்த பேச்சுவார்த்தை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
வெளியாகியிருக்கும் தகவல்களின்படி, சென்னையில் உள்ள ஃபோர்டு நிறுவனம் வரும் ஜூன் மாதம் மூடப்படும் என்று தெரிகிறது.