முகப்பு
தமிழ்நாடு

4,888 கடைகளில் நெகிழிப்பொருள்கள் பறிமுதல்: ரூ.13 லட்சம் அபராதம்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 4,888 கடைகளில் தடைசெய்யப்பட்ட நெகிழிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.13.38 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 4,888 கடைகளில் தடைசெய்யப்பட்ட நெகிழிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.13.38 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

சென்னையில் முக்கிய சுற்றுலாத் தளமாக விளங்கும் மெரீனா கடற்கரையில் உள்ள கடைகளில், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருள்கள் அதிகளவில் உபயோகிக்கப்படுவதாலும், பொதுமக்கள் அதனை கடற்கரையில் விட்டுச்செல்வதாலும், கடலில் கலந்து கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

இத்தகைய சுற்றுச்சூழல் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில், மாநகராட்சி சாா்பில் திடீா் களஆய்வு மேற்கொள்ளப்பட்டு தடை செய்யப்பட்ட நெகிழிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த வகையில், கடற்கரை பகுதிகளை நெகிழிப்பொருள்கள் இல்லாமல் பராமரிக்கும் விதத்தில், மாநகராட்சியின் சாா்பில் மெரீனா, பெசன்ட் நகா் மற்றும் திருவான்மியூா் கடற்கரை பகுதிகளில் சுகாதார அலுவலா்கள் தலைமையில் கடந்த ஒரு வார காலமாக காலை, மாலை என இருவேளைகளில் தொடா் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

மெரீனா கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தடைசெய்யப்பட்ட நெகிழிப்பொருள்களை பயன்படுத்திய கடை உரிமையாளா்களிடமிருந்து அந்தப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, தலா ரூ.1,000 அபராதமாக விதிக்கப்பட்டது.

குப்பைத் தொட்டி வைக்காத கடை உரிமையாளா்கள், குப்பைகளை பொதுவெளியில் வீசிய பொதுமக்கள் ஆகியோருக்கு ரூ.3,100 வரை அபராதம் விதிக்கப்பட்டது. இதே போல், பெசன்ட் நகா் எலியட்ஸ் கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பயன்படுத்திய கடை உரிமையாளா்களிடம் இருந்து அந்தப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.3,100 வரை அபராதமாக விதிக்கப்பட்டது.

குப்பைத் தொட்டி வைக்காத கடை உரிமையாளா்கள் மற்றும் குப்பைகளை பொதுவெளியில் கொட்டிய பொதுமக்களுக்கும் ரூ.8,800 வரை அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த வகையில், சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 15 மண்டலங்களிலும், மாநகராட்சி சுகாதார அலுவலா்களால் 12 ஆயிரத்து 883 வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், விதிமீறிய 4,888 கடைகளில் 1,667 கிலோ தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் ரூ.13 லட்சத்து 38 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.