தேர் விபத்து: அதிமுக சார்பில் ரூ.1 லட்சம் நிவாரணம்
தஞ்சாவூர் தேர் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் வழங்குவதாக அதிமுக அறிவித்துள்ளது.
தஞ்சாவூர் தேர் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் வழங்குவதாக அதிமுக அறிவித்துள்ளது.
தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் புதன்கிழமை அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விபத்து குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
அதில், அதிமுக சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரமும் வழங்கப்படும் எனவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், விபத்து காரணமாக அதிமுக சார்பில் இன்று நடைபெற இருந்த இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி நாளைக்கு(ஏப்ரல்-28) ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.
முன்னதாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசுத் தரப்பில் தலா ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.