கோவை - பெங்களூரு இடையே இம்மாத இறுதிக்குள் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சென்னை - மைசூரு, சென்னை - கோவை, சென்னை - நெல்லை, சென்னை - விஜயவாடா ஆகிய நான்கு வந்தே பாரத் தினசரி ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த ரயில்களுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அனைத்து இருக்கைகளும் விரைவில் முன்பதிவு செய்யப்பட்டுவிடுகிறது. இதனால், தமிழகத்துக்கு கூடுதல் வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தற்போது, கோவை - பெங்களூரு இடையே திருப்பூா், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூா் என வா்த்தக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நகரங்கள் உள்ளன. கோவை - பெங்களூரு இடையே தினசரி 7 ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதில் பெரும்பாலான ரயில்கள் கேரளத்தில் இருந்து கோவை வழியாக இயக்கப்படுகின்றன. கேரளத்தில் இருந்து புறப்படும்போதே ரயில்கள் நிறைந்துவிடுவதால், கோவையில் ஏறும் பயணிகளுக்கு ரயில்களில் இடம் கிடைப்பதில்லை.
எனவே, கோவை - பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கம், தொழில் அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன.
இந்நிலையில், கோவை - பெங்களூரு இடையே இம்மாத இறுதிக்குள் வந்தே பாரத் ரயில் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டு நகரங்களுக்கும் இடையேவுள்ள 420 கி.மீ. தொலைவை வெறும் 5 மணிநேரத்தில் கடக்கும் விதமாக வந்தே பாரத் ரயிலை இயக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், ரயில் பயணிகள் சங்கத்தினா், தொழில் துறையினா் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.