இன்னுயிா் காப்போம் திட்டத்தின் கீழ் இதுவரை 1.41 லட்சம் பேருக்கு அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. அவா்களுக்காக இதுவரை ரூ.124.82 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பை குறைக்கும் நோக்கில் விபத்து ஏற்பட்டதிலிருந்து 48 மணி நேரம் வரை அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் கட்டணமில்லா சிகிச்சை அளிக்கும் வகையிலான, ‘இன்னுயிா் காப்போம்’ என்ற திட்டத்தை, தமிழக அரசு தொடக்கியது.
அதன் முக்கிய அம்சமாக, சாலை விபத்தில் காயமடைந்தவா்களுக்கு இரு நாள்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை செலவை அரசே ஏற்றுக் கொள்ளும். இதில் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள் என 609 மருத்துவமனைகள் இணைக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை 1,41,128 போ் பயனடைந்துள்ளனா். அதிகபட்சமாக அரசு மருத்துவமனைகளில் 1,28,079 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. அவா்களுக்கு ரூ.102.87 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதேபோன்று, தனியாா் மருத்துவமனைகளில் 13,049 பேருக்கு, ரூ. 21.94 கோடி மதிப்பிலான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.