உணவகத்தில் வாங்கிய புரோட்டாவில் பூரான்: 2 பேர் மருத்துவமனையில் அனுமதி!
கொங்கணாபுரம் அருகே உணவகத்தில் வாங்கிய புரோட்டா குழம்பில் பூரான் கிடந்த நிகழ்வு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
எடப்பாடி: கொங்கணாபுரம் அருகே உணவகத்தில் வாங்கிய புரோட்டா குழம்பில் பூரான் கிடந்த நிகழ்வு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
பூரான் கிடந்த உணவை சாப்பிட்ட இருவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட கட்சி பள்ளி கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் மகன் முரளி கிருஷ்ணன்(21), மற்றும் இவரது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த கலையரசன் (20) ஆகியோர் நேற்று (வியாழன் அன்று) இரவு, கொங்கணாபுரம் - ஓமலூர் சாலையில் உள்ள எட்டிக்குட்டை மேடு பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் புரோட்டா பார்சல் வாங்கிச் சென்றனர்.
Advertisement
Advertisement
வாங்கிச் சென்ற புரோட்டாவை சாப்பிட்டுக் கொண்டிருந்த அவர்கள் திடீரென புரோட்டா குழம்பில் பூரான் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சற்று நேரத்தில் அவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில், இருவரும் எடப்பாடி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் கொங்கணாபுரம் காவல் துறையினர் சம்பந்தப்பட்ட உணவகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புரோட்டா பார்சலில் பூரான் கிடந்த சம்பவம் கொங்கணாபுரம் சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தி உள்ளது.