கோவளத்தில் பைக் மீது மோதிய கார்: ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி!
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இரு சக்கர வாகனம் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.
சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இரு சக்கர வாகனம் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் திங்கள்கிழமை பலியாகினர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகரன் (31). இவர் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி பவித்ரா (27) என்ற மனைவியும், நவ்னீத் (2) என்ற மகனும் உள்ளனர்.
கடந்த வாரம், பவித்ராவும், குழந்தையும் சென்னை கொசப்பேட்டையில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றிருந்தனர். இந்நிலையில் திங்கள் கிழமை இருவரையும் அழைத்து வருவதற்காக தனசேகரன் தனது மோட்டார் சைக்கிளில் சென்னை சென்றார். தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றவர் தனது மனைவி குழந்தையுடன் மூவரும் கொசப்பேட்டையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக திருக்கழுக்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
Advertisement
Advertisement
முட்டுக்காடு படகுத் துறையை தாண்டி கோவளம் அருகே குன்றுக்காடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, சென்னையில் இருந்து வேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் மூவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் தலையில் காயமடைந்த தனசேகரன் மற்றும் பவித்ரா இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குழந்தை நவ்னீத்தை மீட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தையும் உயிரிழந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து காவல் துறையினர், சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 8 பேர் பலி
இதனிடையே சொகுசு காரை ஓட்டி வந்த ஆந்திர மாநிலம், ராஜமுந்திரியைச் சேர்ந்த வினய் (45) என்பவரை கைது செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். அந்த நபர் மது அருந்தி இருந்தாரா என்பது குறித்து அறிய மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.