முகப்பு
தமிழ்நாடு

செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம்!

செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளார்.

Updated On : 15 ஏப்ரல், 2024 at 4:17 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2024 at 4:11 PM

விழுப்புரம்: தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி உள்ளிட்டோர் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் திங்கள்கிழமை பிறழ் சாட்சியமளித்தார்.

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக அமைச்சர் க.பொன்முடி உள்ளிட்ட8 பேர் மீது விழுப்புரம் குற்றப்பிரிவு போலீஸார் 2012 -ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தனர்.

Advertisement

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லோகநாதன் என்பவர் இறந்துவிட, மற்ற 7 பேர் மீதும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில், அரசுத் தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 67 பேரில் இதுவரை 21 பேரிடம் சாட்சியம் பெறப்பட்டது. அதில் அரசுத் தரப்புக்கு பாதகமாக 17 பேர் பிறழ் சாட்சியமளித்துள்ளனர்.

விழுப்புரம் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது, ஜெயச்சந்திரன், சதானந்தன் ஆகிய இருவர் மட்டும் ஆஜராகினர். அமைச்சர் க.பொன்முடி உள்ளிட்ட மற்ற 5 பேரும் ஆஜராகவில்லை. இதற்கான காரணத்தை திமுக வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் மனுவாகத் தாக்கல் செய்தனர். இதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

இதைத் தொடர்ந்து, அரசுத் தரப்பு சார்பில் 22 - ஆவது சாட்சியாக ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலரான சின்னசாமி நீதிமன்றத்தில் ஆஜராகி, சாட்சியமளித்தார்.

உயர் அலுவலர்களின் வற்புறுத்தியதன் பேரில் கோப்புகளில் நான் கையெழுத்திட்டேன். எனக்கும், இந்த வழக்குக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது எனக் கூறி, அரசுத் தரப்புக்கு பாதமாக சாட்சியமளித்தார்.

இந்த சாட்சியத்தை பதிவு செய்து கொண்ட முதன்மை மாவட்ட நீதிபதி ஆர். பூர்ணிமா, வழக்கின் விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு (ஏப்.16)ஒத்திவைத்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் பிறழ் சாட்சியமளித்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.