புயல் பாதிப்பு: தமிழகம் வருகிறது மத்தியக் குழு!
ஃபென்ஜால் புயல் பாதிப்புகள் ஆய்வு செய்ய மத்தியக் குழு வருவது பற்றி...
ஃபென்ஜால் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழகத்துக்கு குழுக்களை அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல் கடந்த சனிக்கிழமை மரக்காணம் அருகே கரையைக் கடந்தது.இதனால், விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட மரக்காணம், விக்கிரவாண்டி, விழுப்புரம் பகுதிகளை திங்கள்கிழமை நேரில் சென்று பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், வெள்ள பாதிப்பு நிவாரண நிதி கோரி பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
இதையும் படிக்க : புயல் பாதிப்பு: முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் பிரதமர்!
இந்த நிலையில், தமிழகத்துக்கு வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழுக்களை அனுப்புவது குறித்து உள்துறை அமைச்சகம் இன்று ஆலோசனையில் ஈடுபடுகிறது.
3 மத்தியக் குழுக்களை தமிழகத்துக்கு அனுப்புவதற்கு உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, இன்று காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியின் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார்.