பேரிடர்களுக்கு இயற்கையல்ல, நாமே காரணம்: உயர் நீதிமன்றம்
பேரிடர்களுக்கு இயற்கையல்ல, நாமே காரணம் என உயர் நீதிமன்றம் கருத்து
சென்னை: உலகின் பல்வேறு பகுதிகளிலும் நேரிடும் பேரிடர்களுக்கு இயற்கையை இனியும் நாம் குறைசொல்ல முடியாது, அதற்கு நாம்தான் காரணம் என்று சென்னை உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது.
உதகை, கொடைக்கானல் உள்பட மலைவாழ்விடங்களில் பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிப்பது தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இந்த கருத்தினை தெரிவித்துள்ளனர்.
பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிப்பது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார், பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் இருந்து டன் கணக்கில் பிளாஸ்டிக் பொருள்களை சேகரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
Advertisement
உலகில் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பேரிடர்கள் நேரிடுகின்றன. ஆனால், பேரிடர்களுக்கு இனியும் நாம் இயற்கையை குறைசொல்ல முடியாது, அதற்கு நாம்தான் முதல் காரணம். உரிமைகளை பற்றி பேசும் மக்கள், தாங்கள் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த வழக்கில், அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.