தங்கம் வென்று தாயகம் திரும்பிய வீராங்கனைகளின் கேரம் திறமையை போற்றும் வகையில் பரிசுத்தொகை வழங்குவோம் என்று அவர்களை நேரில் வாழ்த்தியபோதே அறிவித்திருந்தோம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
அமெரிக்காவில் நடைபெற்ற 6-ஆவது உலக கேரம் போட்டியில் பங்கேற்று 3 தங்கப் பதக்கங்களை வென்ற வீராங்கனை காசிமாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து தகவலுடன் புகைப்படங்களையும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், விளையாட்டுப் போட்டிகளில் நம் தமிழ்நாட்டு வீரர் - வீராங்கனையர் பல்வேறு சாதனைகளை படைத்திட தமிழக அரசு தொடர்ந்து துணை நின்று வருகிறது.
இதையும் படிக்க.. சென்னைக்கு இதுதான் கடைசி மழையா?
அந்த வகையில், அமெரிக்காவில் நடைபெற்ற 6-ஆவது உலக கேரம் போட்டியில் பங்கேற்ற வீராங்கனை காசிமா உள்பட 3 வீராங்கனையர் மற்றும் 1 பயிற்சியாளருக்கு தலா ரூ.1.50 லட்சம் என மொத்தம் ரூ. 6 லட்சம் நிதியுதவியை தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை வழங்கி வாழ்த்தி அனுப்பி இருந்தது.
வண்ணாரப்பேட்டையில் இருந்து புறப்பட்டுச் சென்ற தங்கை காசிமா 3 வெவ்வேறு பிரிவுகளில் தலா ஒரு தங்கம் என 3 பதக்கங்களை குவித்துவிட்டு தாயகம் திரும்பியிருந்தார்.
அவரைப்போலவே, வீராங்கனை மித்ரா 2 தங்கம், வீராங்கனை நாகஜோதி 1 தங்கம், 1 வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளனர்.
வெற்றி பெற்று நாடு திரும்பிய போதே அவர்களை நேரில் சந்தித்து நினைவுப்பரிசு வழங்கினோம். அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் அவர்களின் கேரம் திறமையை போற்றும் வகையில் பரிசுத்தொகையை வழங்குவோம் என்று அறிவித்தோம்.
எனவே, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, வீராங்கனை எம்.காசிமாவுக்கு ரூ.1 கோடியும், வி.மித்ராவுக்கு ரூ.50 லட்சமும், கே.நாகஜோதிக்கு ரூ.50 லட்சமும் என மொத்தம் ரூ.2 கோடியை சிறப்பு ஊக்கத் தொகையாக இன்று நேரில் வழங்கியுள்ளோம்.
வீராங்கனைகள் மூவரும் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைக்க அனைத்து வகையிலும் திமுக தலைமையிலான அரசு துணை நிற்கும். அவர்களுக்கு அன்பும் வாழ்த்தும் என்று பதிவிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.