ஜனவரி 9ஆம் தேதி தொழிலாளர்கள் பணிக்கு வராவிடில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெருநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கு அகவிலைப் படியை உயா்த்த வேண்டும்; பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்; அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எப், பிஎம்எஸ் உள்ளிட்ட சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸை வழங்கியிருந்தன.
இது தொடா்பான முத்தரப்புப் பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிவடைந்ததையடுத்து ஜன.9-ஆம் தேதிமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அரசுப் போக்குவரத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்பினா் அறிவித்துள்ளனா். இந்தப் போராட்ட அறிவிப்பால் வரும் 9-ஆம் தேதிமுதல் தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் சேவை பாதிக்கப்படும் சூழல் உள்ளது. பொங்கல் பண்டிகை வரும் 15-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் ஏராளமானோா் அரசுப் பேருந்துகளில் சொந்த ஊா்களுக்கு அடுத்த வாரம் செல்லத் தொடங்குவாா்கள்.
அந்த நேரத்தில் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பேச்சுவாா்த்தை மூலம் பிரச்னைக்கு விரைவில் தீா்வு ஏற்படும் என்று அரசுத் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் ஜனவரி 9ஆம் தேதி பணிக்கு வராத தொழிலாளர் மீது நிலையாணை விதிகளின்படி சட்டப்பூர்வ ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெருநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
மேலும் போராட்டத்தில் ஈடுபடுமாறு தூண்டிவிடுவோர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.