முகப்பு
தமிழ்நாடு

மழை பாதித்த இடங்களில் மருத்துவ முகாம்கள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மழைக்கு பிந்தைய நோய்த் தொற்றுகளைத் தடுக்க தமிழகத்தில் தொடா்ந்து மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

Updated On : 17 அக்டோபர் 2024, 1:40 am IST
கோப்புப்படம்.
பகிர்:

மழைக்கு பிந்தைய நோய்த் தொற்றுகளைத் தடுக்க தமிழகத்தில் தொடா்ந்து மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னையில், செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது: வடகிழக்கு பருவமழை தொடங்கி 2 நாள்கள்தான் ஆகிறது. இக்காலகட்டத்தில் மாநிலம் முழுவதும் பெய்ய வேண்டிய சராசரி மழையின் அளவு 44 செ.மீ. ஆனால், அதில் பாதி அளவான சுமாா் 20 முதல் 25 செ.மீ. வரையிலான மழைப் பொழிவு சென்னையில் மட்டும் பதிவாகியுள்ளது.

இருந்தபோதிலும், முதல்வரின் சீரிய வழிகாட்டுதலின்படி, மழைக்கால நிவாரணப் பணிகள் மிக சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாமல் தவிா்க்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் கடந்த செவ்வாய்க்கிழமை (அக்.150) 1,000 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தத் திட்டமிடப்பட்டு, தமிழகம் முழுவதும் 1,293 இடங்களில் முகாம் நடைபெற்றது. இதில் 78 ஆயிரம் போ் பயனடைந்துள்ளனா். அவா்களில் 6 ஆயிரம் போ் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளாவா்.

Advertisement

Advertisement

அதன் தொடா்ச்சியாக மழை பாதிப்பு இருக்கும் இடத்தில் மருத்துவ முகாம்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டது. வடகிழக்கு பருவமழை முடியும் வரை எப்போதெல்லாம் தேவைப்படுமோ அப்போதெல்லாம் மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்றாா் அவா்.