முகப்பு
தமிழ்நாடு

புத்தாண்டுக் கொண்டாட்டம்: பட்டாசு வெடிக்கத் தடை! என்னென்ன கட்டுப்பாடுகள்?

புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது பட்டாசு வெடிக்கத் தடை.

Updated On : 30 டிசம்பர், 2025 at 12:24 PM
கோப்புப்படம்
பகிர்:

புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது, பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வரும் 2026ம் ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு, சென்னை பெருநகர காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

முக்கியமாக, புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது, கடற்கரை, வழிபாட்டுத் தலங்கள், சாலைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாநகர காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, காவல்துறை என மொத்தம் 19,000 காவல்துறை அதிகாரிகள் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பாதுகாப்பு அளிக்க சென்னை பெருநகர காவல் துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளது.

மேலும், காவல் துறையினருக்கு உதவியாக, சுமார் 1,500 ஊர்க்காவல் படையினரும் புத்தாண்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு டிச. 31 ஆம் தேதி (புதன்கிழமை) இரவு 9 மணியிலிருந்து முக்கியமான இடங்களில் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு சென்னை, மயிலாப்பூர், கீழ்பாக்கம், திருவல்லிக்கேணி, தியாகராயநகர், அடையாறு, புனித தோமையர்மலை, பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு, அண்ணாநகர், கொளத்தூர் மற்றும் கோயம்பேடு ஆகிய பகுதிகளில் மொத்தம் 425 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, மற்றும் ஜிஎஸ்டி ரோடு போன்ற பகுதிகளில் இருசக்கர வாகன பந்தயம் (Bike Race) தடுப்பு நடவடிக்கையாக 30 கண்காணிப்பு சோதனைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் உள்ள 100-க்கும் மேற்பட்ட முக்கிய கோயில்கள், தேவாலயங்கள், இதர வழிபாட்டுத் தலங்கள், பொது இடங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

டிச. 31 ஆம் தேதி மாலை முதல் ஜன. 1 ஆம் தேதி வரை பொதுமக்கள் கடலில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், மெரீனா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் காவல் துறையினர், குதிரைப்படைகள் மற்றும் ATV (All Terrain Vehicle) எனப்படும் மணலில் செல்லக்கூடிய வாகனங்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மது அருந்த அனுமதிக்கப்பட்ட இடங்களில் குழந்தைகள் அனுமதிக்கப்படக் கூடாது. மேலும், அவசர மருத்துவ உதவிக்கு, முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அருகில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவ குழுவினருடன் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும்.

பொது இடங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் உள்பட அனைத்து இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்கத் தடை செய்யப்பட்டுள்ளது.

அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்துவதற்கும் காவல்துறை மற்றும் இதர துறைகளில் அனுமதி பெற்ற பின்னரே நிகழ்ச்சி நடத்திட வேண்டும். மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை பெருநகர காவல் துறை, பொதுமக்களுக்கு எந்தவித இடையூறுகளும் இல்லாமல் அனைத்து நிகழ்வுகளை நடத்திட, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து, சென்னை பெருநகரில் 12 காவல் மாவட்டங்களில் பொதுமக்கள் புத்தாண்டை சிறப்பாகவும், மற்றவர்களுக்கு சிரமமின்றியும், எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் மகிழ்ச்சியுடன் கொண்டாட அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

மேலும், சென்னை பெருநகர காவல் துறையின் அறிவுரைகளை கடைப்பிடித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடுமாறும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்களுடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், வழக்குப் பதிவு செய்ய நேரிட்டால் பாஸ்போர்ட், வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகளின் விண்ணப்பங்கள் போலீஸாரால் சரிபார்ப்பு செய்யும்போது பாதிப்பு ஏற்படும் என்பதால் இளைஞர்கள் மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

summary

The use of firecrackers has been banned during the New Year celebrations.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.