கிருஷ்ணகிரியில் தாலியுடன் பள்ளி வந்த மாணவி: ஐந்து பேர் மீது வழக்கு
கிருஷ்ணகிரியில் தாலியுடன் பள்ளி வந்த மாணவி குறித்து ஆசிரியர் அளித்த புகாரின்பேரில் ஐந்து பேர் மீது வழக்கு
கிருஷ்ணகிரி: அரசுப் பள்ளி ஒன்றில் 14 வயது மாணவி தாலியுடன் பள்ளிக்கு வந்ததைக் கண்டுபிடித்த ஆசிரியை, சமூக நலத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில், மாணவியை திருமணம் செய்திருந்த 25 வயது இளைஞர், அவரது பெற்றோர், சிறுமியின் பெற்றோர் என ஐந்து பேரிடம் விசாரணை நடத்தவும் காவல்துறையினர் முடிவு செய்திருக்கிறார்கள்.
சில நாள்கள் விடுமுறையில் இருந்து, பள்ளி வந்த மாணவியின் கழுத்தில் தாலி இருப்பதை அறிந்த ஆசிரியர், சமூக நலத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து அவர்கள் விரைந்து வந்து மாணவியிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.
அப்போதுதான் மாணவிக்கும் காவேரிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞருக்கும் திருமணம் நடைபெற்றிருந்தது தெரிய வந்தது.
இவர்களது திருமணம் யாருக்கும் தெரியாமல் கோயிலில் நடத்தப்பட்டதாகவும், தனக்கு புத்தாடைகள் எடுக்கப்போவதாகச் சொல்லி மாணவி பள்ளிக்கு விடுமுறை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் இதுவரை கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றும், குழந்தை திருமணம் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.